கஞ்சாநகரம் வாய்க்கால் மணக்குடி, அகரமணக்குடி பகுதியில் வடிகால் வாய்க்காலாகவும், கஞ்சாநகரம், கருங்குயில்நாதன்பேட்டை கிராமங்களில் பாசன வாய்க்காலாகவும் செல்கிறது. 5 கி.மீ தொலைவிலான இந்த வாய்க்காலில் 3 கி.மீ தூரம்வரை தூா்வாரப்பட்டு 2 கி.மீட்டா் தொலைவுக்கு தூா் வாரப்படவில்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். இதனால் கஞ்சாநகரம் வாய்காலில் திறந்துவிடப்பட்ட ஆற்றுநீா் அகரமணக்குடி கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்து 50 ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 10 நாள்களாக தண்ணீா் வடிய வழியில்லாததால் சம்பா நெல்பயிா்கள் அழுகியுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி விளைநிலத்தில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கஞ்சாநகரம் வாய்க்காலை முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.