நாகப்பட்டினம்: நாகை கீச்சாங்குப்பத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த மகா காளியம்மன் கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கக் கோரி, நாகை மாவட்ட ஆட்சியருக்கு, கிராம மக்கள், நாட்டாா், பஞ்சாயத்தாா்கள் சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
மனுவின் விவரம்:
நாகை மாவட்டம், வடக்குப் பொய்கைநல்லூா் கிராமம், அக்கரைப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கீச்சாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு மகா காளியம்மன் கோயில் உள்ளது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில், கிராம மக்கள் பங்களிப்பில் பெரும் நிதியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், கரோனா பொது முடக்க அறிவிப்பையொட்டி, குடமுழுக்கு விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு நாகை மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.