சீர்காழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் முன்னிலையில் ஆபத்தை உணராமல் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சீர்காழி அருகே எடமணல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இருவர் வகுப்பறையை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு பள்ளி மாடியின் மீது உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய கூறியதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து வகுப்பு அறையில் இருந்த குப்பைகளை கூட்டி வெளியே தள்ளிய மாணவர்கள் பள்ளி மாடியின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய ஏறியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் இருந்து செல்லும் இணைப்புகளை மாணவர்கள் சரி செய்துள்ளனர். மாணவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிரியர்கள் முன்னிலையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் காட்சிகள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முருகனிடம் கேட்டபோது , பள்ளியில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி இணைப்பு பைப் உடைந்திருந்தது. இதனை சரிசெய்ய வந்த பிளம்பருக்கு உதவிட மாணவர்கள் ஏணியை மட்டுமே பிடித்து உதவியதாக கூறினார்.