நாகை: மேற்கு வங்காளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஞானசேகரன்(45). மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இராணுவ வாகனம் மூலமாக சொந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது.
அவரது உடலானது பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு கிருஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவர் மீது போற்றப்பட்டிருந்த தேசியக் கொடியினை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கில் அரசுத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.