சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை, நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இந்தக் கோயிலில் புற்றடி மாரியம்மன் பக்தர்கள் வேண்டியதை வேண்டிய மாத்திரத்திலேயே கொடுத்தருளும் மகா சக்தியாக எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தில் வேண்டுதலை முன்வைக்கும் பக்தர்கள் அவை நிறைவேறியதும் அம்பாளுக்கு மாவிளக்கு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதிப்பது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து எட்டு மணிக்கு வேத மந்திரம் ஓத, சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.