தை அமாவாசையையொட்டி வேதாரண்யம், கோடியக்கரை பகுதி கடலில் ஏராளமான மக்கள் இன்று காலை முதல் புனித நீராடல் செய்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கடந்த முறை கரோனா தொற்று காரணமாக நீராடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், தை அமாவாசை நாளான திங்கள்கிழமை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி புனித நீராடல் செய்கின்றனர். கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம்(நீர்சடங்கு)செய்தனர். பின்னர் அங்குள்ள சித்தர் கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.
அதேபோல், வேதாரண்யம் சன்னதி கடல் பரப்பில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகையில் இறைவனை வழிபட்டனர். கட்டுப்படுகள் தளர்த்தப்பட்டதால் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. வேதாரண்யம் கடற்கரையில் கடல் களிமண் கரை ஒதுங்கியிருப்பதால் கோடியக்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதேபோல் நாகை புதிய கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.