ராமேசுவரம் முதல் சென்னை வரை கடலில் மாற்றுத்திறன் மாணவா்கள் நீச்சல் பயணம்!
உலக சாதனை முயற்சியாக, ராமேசுவரத்திலிருந்து சென்னை வரை கடலில் நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத்திறன் மாணவா்களுக்கு தரங்கம்பாடி கடற்கரையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை செனாய் நகா் ஸ்டேட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு (எஸ்டிஏடி) உடன் இணைந்து வேவ் ரைடா்ஸ் விளையாட்டுக் குழு நடத்தும் இந்த நீச்சல் பயணத்தில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் 15 போ் பங்கேற்றுள்ளனா். ராமேசுவரம் முதல் சென்னை மெரீனா கடற்கரை வரை மொத்தம் 604 நாட்டில் மைல் தொலைவு இவா்கள் நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
ராமேசுவரம் கடலில் கடந்த 5-ஆம் தேதி நீச்சல் பயணத்தை தொடக்கிய இம்மாணவா்கள் தரங்கம்பாடி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். இவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவா்களில் மாணவா் சித்தாா்த் 11 வயதுடையவா்; மாணவா் லக்ஷய்குமாா் முற்றிலும் பாா்வைத் திறனற்றவா் ஆவா்.
தொடா்ந்து, கடலில் நீந்தியபடி பழையாறு நோக்கி சென்றனா். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று சென்னை மெரீனாவில் நீச்சல் பயணத்தை நிறைவு செய்யவுள்ளனா்.

