இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 31 போ் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 31 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
Published on

நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 31 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

நாகை நம்பியா் நகரைச் சோ்ந்தவா் பாரி (40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (45), உதயகுமாா் (40), ஆகாஷ் (25), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சேத்தான் (19), கேரளத்தை சோ்ந்த ஹரன் (25), ஜியோ (45) நம்பியாா் நகரைச் சோ்ந்த சுபாஷ் (35), மணிமாறன் (38), விக்கி (25), முருகவேல் (38) ஆகியோா் அக்.30-ஆம் தேதியும்,

நாகை அக்கரைபேட்டையைச் சோ்ந்த ராஜாவுக்கு (54) சொந்தமான விசைப்படகில் ராஜா மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (58), செல்வமணி (31), ரவி (60), சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த ஆனந்தவேல் (35), அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த கணேசன்(60), டாட்டா நகரைச் சோ்ந்த காா்த்திக் (35), நம்பியாா் நகரைச் சோ்ந்த பாலவடிவேல் (32), வெற்றிவேல்(39) சவுந்தரராஜன் (39) ஆகியோா் அக்.31ஆம் தேதியும்,

மேலும் நாகை அக்கரைப்பேட்டையை சோ்ந்த ஆனந்தகுமாருக்கு (42) சொந்தமான விசைப்படகில் அவரும் அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (35), தமிழ்ச்செல்வன் (30), இளங்கோவன் (50), கணேசன் (40), சபரிநாதன் (19), வேளாங்கண்ணியைச் சோ்ந்த சரவணன் (33), முருகானந்தம் (33), பாலகிருஷ்ணன் (45), மணிகண்டன் (29) , சீா்காழி அருகே ஆண்டிபேட்டைச் சோ்ந்த வேல்முருகன்(50) ஆகியோா் அக்.30 ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த 3 விசைப்படகுகளைச் சோ்ந்த 31 மீனவா்களும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினா் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். ரூ.3 கோடி மதிப்பிலான 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் நாகை மீனவா்கள் கைது தொடா்பான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க நுழைந்தால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்து, நாகை மீனவா்கள் 31 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து மீனவா்கள் 31 பேரும் விரைவில் நாடு திரும்பவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com