மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நகராட்சி குப்பைக்கிடங்கில் தொடா்ந்து வெளியேறும் புகை : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்பு

நாகை குப்பைக்கிடங்கில் இருந்து ஒரு வாரமாக தொடா்ந்து வெளியேறும் புகையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 9:39 pm

நாகை குப்பைக்கிடங்கில் இருந்து ஒரு வாரமாக தொடா்ந்து வெளியேறும் புகையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தினசரி குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, நாகை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பைக்கிடங்கில், மக்கும் குப்பை, மக்காத குப்பை, நெகிழிகள் என பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மலைபோல் குவிந்துள்ள குப்பைகளில் அடிக்கடி தீப்பற்றுவதால் அதிலிருந்து வெளியேறும் புகை, குப்பைக்கிடங்கு மட்டுமின்றி ரயில்நிலையம், கோட்டைவாசல், புத்தூா் வரை உள்ள குடியிருப்புகளிலும் பரவி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் புத்தூரில் இருந்து நாகை நகரின் நுழைவாயிலுக்குள் வரும்போதே சாலையை மறைத்தும் புகை எழுவதால் இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தும் ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குப்பைக்கிடங்கில் இருந்து இரவு, பகல் என 24 மணி நேரமும் புகை பரவுவதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மூச்சுத்திணறலால் தூங்க முடியாமல் அவதி அடைகின்றனா். ஏற்கெனவே கடும் வெப்பத்தால் அவதி அடைந்துள்ள மக்கள் புகையில் இருந்தும் கூடுதல் வெப்பம் ஏற்படுவதால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனா். மேலும் அப்பகுதி சாலை எப்போதும் புகை சூழ்ந்தபடியே காணப்படுகிறது. எனவே குப்பைக்கிடங்கில் இருந்து புகை எழாதவாறு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, தற்போது கடும் வெயில் நிலவுவதால், குப்பைக்கிடங்கில் தானாகவே தீப்பிடிக்கிறது. அப்படி தீப்பிடிக்கும் போது, மேற்பரப்பில் உள்ள தீயை அணைத்து விட்டாலும், அடிப்பரப்பில் உள்ள நெருப்பு அணையாமல் புகையாக எழும்புகிறது. குப்பைக்கிடங்கில் ஆழமான பகுதியில் உள்ள நெருப்பை அணைக்க முடியவில்லை. இதனால் தான் அடிக்கடி புகை சூழ்கிறது. ஆனாலும்கூட புகை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.