டாஸ்மாக் ஊழியர்கள் பிரசார இயக்கம்

டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி, மக்கள் சந்திப்பு இயக்க பிரசாரக் கூட்டத்தை மன்னார்குடியில் திங்கள்கிழமை நடத்தினர்.
Updated on
1 min read

டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி, மக்கள் சந்திப்பு இயக்க பிரசாரக் கூட்டத்தை மன்னார்குடியில் திங்கள்கிழமை நடத்தினர்.
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யு) திருவாரூர் மாவட்ட கிளை சார்பில், மன்னார்குடி மேலராஜவீதியில் தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.முத்துவேல் தலைமை வகித்தார்.
தேவைப்படும் ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்தி கடைப்பணி, மாற்றுப்பணி வழங்க வேண்டும். கடைகளில் சராசரி விற்பனை மற்றும் பணி மூப்பு அடிப்படையில் சுழற்சி முறையிலானப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி வரைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியம், வார, தேசிய, பண்டிகை விடுமுறை ஆகியவற்றை நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளி ஊழியருக்கான அரசாணையை அமல்படுத்த வேண்டும். சர்வீஸ் ரெக்கார்டு, இ.எஸ்.ஐ. திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்டத் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நலப் பிரிவு உருவாக்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை நிலுவையுடன் வழங்குவதுடன், ஊழியர்களுக்கு சாதகமான தீர்ப்பில் மேல்முறையீடு செய்யாமல், தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் சங்க மாவட்டச் செயலர் பி.என். லெனின், மாவட்டப் பொருளாளர் பி. பாப்பையன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலர் எம்.பி. பாண்டியன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. ரகுபதி, டி.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com