சார்பு அணி என்பது ஒரு பயிற்சிக்களம் மாதிரி. எடுத்த உடனே எல்லாரையும் முதன்மை ஆட்டத்தில் ஆட விட்டுவிட மாட்டார்கள். அதற்கு முன்னால் கொஞ்சம் பயிற்சி இருக்க வேண்டும். அப்படித்தான் நம் சார்பு அணிகளில் நாம் பணியாற்றுவது, நமக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய மிகப் பெரிய பொறுப்புகளுக்கான ஒரு முன்னோட்டம். அதற்கான அனுபவத்தை நாம் அணிகளில் இருந்து நம் பணிகள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று சார்பு அணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய பல பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மாவட்டச் செயலாளர்களாக, பொறுப்பாளர்களாக, அமைச்சர்களாக, மேயர்களாக, துணை மேயர்களாக, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இன்று பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் இன்று தமிழ்நாட்டிற்கு முதல்வரைத் தந்தது திமுக இளைஞர் அணி என்ற ஒரு சார்பு அணிதான். பொதுச் செயலாளரைத் தந்தது மாணவர் அணிதான். எனவே, சார்பு அணிதானே என்று நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. சார்பு அணி என்பதால், தாய்க் கழகத்தின் மேல் நாம் சார்ந்து இருக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது. அதை மாற்றுகிறோம், தாய்க் கழகம்தான் நம் மேல் சார்ந்து இருக்கிறது, நம் உழைப்பின் மேல் சார்ந்து இருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கும் வகையில் உழைக்க வேண்டும்.