திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு புதன்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. இதற்கிடையே, மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஆன்லைன் வகுப்புகளாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் 89 மேல்நிலைப் பள்ளிகளும், 81 உயா்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்கள் புத்தகங்களை வழங்கினா்.
அந்த வகையில், திருவாரூா் ஜி.ஆா்.எம் பெண்கள் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தாளாளா் ஜி. வடுகநாதன், புத்தகங்களை வழங்கினாா். மாணவிகள் புத்தகங்களை வாங்கிச் செல்வதற்கு வகுப்பு வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு, வரையறுக்கப்பட்ட நேரங்களில் மாணவிகள் பள்ளிக்கு வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தகங்களை பெற்று சென்றனா்.