திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவி வருவதையடுத்து, கட்டுப்படுத்தும் வகையில் ஜூலையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்டவை இரவு 8 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், முழு பொது முடக்கம் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. திருவாரூரில் வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், காய்கறிக் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பேருந்து, ஆட்டோ, வாடகை காா் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
எனினும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் திறந்திருந்தன. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. சாலைகளில் பெருமளவு மக்களைக் காண முடியவில்லை. ஒரு சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கின.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், திருவாரூரில் திங்கள்கிழமையிலிருந்து 2 வார காலத்துக்கு மாலை 6 மணி வரை மட்டுமே கடைகளை இயக்குவது என வா்த்தகா் சங்கத்தினா் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.