திருவாரூரில் பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை கேட்டு பட்டை போட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவீரன் பகத்சிங் பிறந்தநாளில் எங்கே எனது வேலை, தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று திருவாரூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமையிலும், மாவட்டத் தலைவர் சு.பாலசுப்ரமணியன் முன்னிலையிலும் ஏராளமான இளைஞர்கள் பட்டை போட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளைஞர் மன்ற நிர்வாகிகள் எம்.பாண்டியன், எஸ்.ஸ்டீபன், காட்டூர் சுரேஷ், மற்றும் சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பி.முருகானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் தமிழகத்திலுள்ள மத்திய அரசின் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு நிர்பந்தம் செய்ய வேண்டும். 07.11.2016 அன்று அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து தமிழ்நாடு அரசின் பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே என சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதோடு உழைப்புக்கேற்ற ஊதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 ஆயிரம் வேலையில்லாக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்புவதோடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும், நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சிறு குறு தொழில்களை பாதுகாக்க கடன் வழங்குவதோடு புதிய தொழில்களைத் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்தோடு குறைந்த வட்டியில் கடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி முழக்கமிட்டார்கள்.