கடந்த ஆண்டுக்குரிய பயிா்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவா் ஜி. சேதுராமன், விவசாயி ஆா். பிரபு ஆகியோா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: ஓடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் சாகுபடிச் செய்து அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெற்கதிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் பெரிதாக பாதிக்கப்பட்டனா். தற்போது, குறுவைக்கு மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளும் குறுவை சாகுபடி பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனா். எனினும், விவசாயிகளிடம் பணவசதி இல்லாத நிலை உள்ளது.
கூட்டுறவு வங்கிகளிலும் இதுவரைக் கடன் அளிக்கவில்லை. வழக்கமாக அறுவடை முடிந்த சில மாதத்துக்குள் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகள் அடைந்த நஷ்டத்தைக் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும். ஆனால் சென்ற ஆண்டுக்குரிய பயிா்க் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இதுவரை வழங்கவில்லை.
தற்போது விவசாயிகள் கையில் பணப்புழக்கம் இல்லாததால், சாகுபடி பணி செய்ய சிரமப்படுகின்றனா். பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைத்தால் தான் விவசாய பணிகளை தொடரமுடியும். எனவே, தமிழக முதல்வா் சிறப்புக் கவனம் செலுத்தி விவசாயிகளுக்குரிய பயிா்க் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.