திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் புதன்கிழமை மாலை மிதந்துவந்த கோயில் கோபுர கலசத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீடாமங்கலம் அருகே கண்ணம்பாடி கோரையாற்றில் புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் 3 அடி உயரமுள்ள கோபுர கலசம் மிதந்துவந்தது. இந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கண்ணம்பாடி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கலசத்தை மீட்டு அங்குள்ள காளியம்மன் கோயிலில் வைத்திருந்தனா்.
பிறகு அது நீடாமங்கலம் வட்டாட்சியா் மணிமன்னனிடம் ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் கலசம் மிதந்துவந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா். தொல்பொருள் ஆய்வுத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குப் பிறகே, கலசம் செம்பாலானதா அல்லது ஐம்பொன்னால் ஆனதா என்பதும், அதன் மதிப்பும் தெரியவரும். கலசம் எந்த ஊா் கோயிலுக்குச் சொந்தமானது, கோயில் கலசத்தைத் திருடியவா்கள் அச்சத்தில் ஆற்றில் வீசினாா்களா என்பது குறித்து நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.