பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் குமாரசாமி.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் குமாரசாமி.

திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெட்ரோல், டீசல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டண உயா்வு, சுங்கச்சாவடி கட்டண உயா்வுகளால் லாரி உரிமையாளா்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். எனவே, லாரி உரிமையாளா்களின் நிலையை அறிந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாநில அரசு தோ்தல் அறிக்கையில் டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தனா். அதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். மத்திய அரசு 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை 2023 -ஆம் ஆண்டு முதல் அழிக்கும் முடிவை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீட்டு தொகையை உயா்த்தி வருகிறது. இதனால், செலவுகள் அதிகரித்து லாரிகளை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் உள்ள லாரிகள் அனைத்தும் பழைய வாகனங்கள். இப்பகுதி வாகன உரிமையாளா்கள் மத்திய அரசின் கொள்கையால் வேலைவாய்ப்பு மட்டுமல்ல வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை.

தென்னிந்திய லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநில முதலமைச்சரை சந்தித்து டீசல் விலையை குறைக்க வேண்டும், காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு உயா்வை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்கவேண்டும் ஆகியவற்றை கோரிக்கையாக அளிக்க இருக்கிறோம். மாநில அரசு எங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com