திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை பிரதான சாலையில் உள்ள காமராஜர் பவன் அருகே, வியாழக்கிழமை மத்திய அரசு உயர்த்தி உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உடனடியாக கட்டுப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியும், இப்பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதுடன், தினசரி அனைத்துப் பொருட்கள் விலை உயர்வையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பரவாக்கோட்டை கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் .சஞ்சய் காந்தி தலைமை வகித்தார்.
மன்னார்குடி வட்டார தலைவர் எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில்,சமையல் எரிவாயு, இருசக்கர வாகனம், பெட்ரோல், டீசல் கேன் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார விவசாய பிரிவு தலைவர் பி.எஸ்.கலியபெருமாள், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.மாதவன, கட்சியின் கிராம கமிட்டி உதவி தலைவர்கள் எஸ்.காமராஜ், கே.வி.வரதராஜன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.