பாடகச்சேரி பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் சித்தர் பீட மகா குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நீடாமங்கலம் வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் (பைரவசித்தர்) சித்தர் பீடம் மகா குடமுழுக்கு இன்று
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் சித்தர் பீடத்தில் நடந்த மகா குடமுழுக்கு.
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் சித்தர் பீடத்தில் நடந்த மகா குடமுழுக்கு.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் (பைரவசித்தர்) சித்தர் பீடம் மகா குடமுழுக்கு இன்று 4-ம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

குடமுழுக்கில் கலந்து கொண்ட பக்தர்கள்.
குடமுழுக்கில் கலந்து கொண்ட பக்தர்கள்.

கோவை மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கு அருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயது முதல் வாழ்ந்தவர் ராமலிங்க சுவாமிகள். வெகுதொலைவில் இருப்பவர்கள் இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் கூறினால், அதே நாய்களுடன்கண் முன்பே தோன்றுவார். நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு பரிமாறி ராமலிங்க சுவாமிகள் அழைத்தவுடன் எங்கிருந்தோ வந்து இலைகளில் உள்ள உணவுகளை நாய்கள் சாப்பிட்டு விட்டு போகும்.

இவரை பைரவசித்தர் என்றும் அழைப்பர். பாடகச்சேரியில் தங்கி பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ராமலிங்க சுவாமிகள். வடலூர் வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி ,உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களை சீரமைக்கும் பணிகளையும் செய்தவர். இவர் சீரமைத்த கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவர் திருவெற்றியூரில் சமாதி அடைந்தார். இவர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு மடம் உள்ளது. 

யாகசாலைபூஜை.
யாகசாலைபூஜை.

பெங்களூர், தஞ்சாவூர், சென்னையில் உள்ள கிண்டி போன்ற ஊர்களில் பாடகச்சேரி சுவாமிகளின் சிலைகள் உள்ளது. பாடகச்சேரியிலும், ராமலிங்க சுவாமிகளின் தவபீடம் ஒன்றை நிறுவி பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது அந்த பீடத்தின் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று 4-ம் தேதி புதன்கிழமை மகா குடமுழுக்கு அதிவிமரிசையாக நடைபெற்றது. 

இதனைமுன்னிட்டு கடந்த 2-ம் தேதி திங்கள்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி 3-ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பூஜைகள் நடந்தது. இன்று 4-ம்தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஜபம், பாராயணம், ஹோமம், காலை 9 மணிக்கு நான்காம் கால பூஜை பூர்ணாஹீதி, தீபாராதனை, காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு, காலை 10 மணிக்கு விமான கோபுர குடமுழுக்கு, காலை 10.15 மணிக்கு பாடகச்சேரி சுவாமிகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து மகானுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பட்டீஸ்வரம் எஸ்.சித்தநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லி கும்பாபிஷேக்தை நடத்தி வைத்தனர்.

மூலவர் பைரவசித்தர் ராமலிங்கசுவாமிகள்.
மூலவர் பைரவசித்தர் ராமலிங்கசுவாமிகள்.

புலவர் பன்னீர்செல்வம் குடமுழுக்கு வர்ணனை செய்தார். சிறப்பு நிகழ்ச்சிகள் குடமுழுக்கு விழாவையொட்டி வலங்கைமான் எஸ்.ஏ.எஸ்.சந்திரசேகரன், ஆலங்குடி ஏவிஎன்.பாலமுருகன் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்க அன்பர்கள் அருட்பா இன்னிசை, மழையூர் எஸ்.சதாசிவம் குழுவினரின் அருட்பா இன்னிசை, புதுக்கோட்டை நாட்றாணி சன்மார்க்க சங்க குழுவினரின் வள்ளலாரின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி கிராமவாசிகள், நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com