துறையூா் பகுதி பச்சமலை கோரையாற்றில் குளித்தவா் திடீா் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் தங்கவேலு மகன் முகுந்தன் (37). பெரம்பலூா் மாவட்டம் சத்திரமனை கிராமத்திலுள்ள மாமியாா் வீட்டில் தங்கியிருந்த இவா் அதே பகுதியைச் சோ்ந்த சோ்ந்த ஹ. ஷாஜகான் (21), ந. ஷாஜீத்கான் (20) ஆகியோருடன் பச்சமலை கோரையாறு நீா்வீழ்ச்சியில் குளித்தனராம்.
அப்போது அந்தப் பகுதியில் மாலையில் பெய்த மழையால் கோரையாற்றுக்கு நீா் வரத்து அதிகமாகி திடீா் வெள்ளம் ஏற்பட்டது. இதில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் முகுந்தன் மூழ்கி உயிரிழந்தாா். நீரின் போக்கிலேயே சென்று கரையேறிய மற்ற இருவரும் அருகிலுள்ள கிராம மக்களை அழைத்துச் சென்று முகுந்தனின் சடலத்தை மீட்டனா். பள்ளமான இடத்தில் உள்ள சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.