நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா
By DIN | Published On : 16th April 2022 11:24 AM | Last Updated : 16th April 2022 11:24 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழாவில் வெண்ணைத்தாழி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு நவநீத சேவையாக அருள்பாலித்த சந்தானராமர்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவின் எட்டாம் நாளான சனிக்கிழமை வெண்ணைத்தாழி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் 1761-ல் கட்டப்பட்டது நீடாமங்கலம் சந்தானராமர் கோயில். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல்பெற்றது. புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம்.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஶ்ரீராமநவி பெருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் ஶ்ரீராமநவமி பெருவிழா கடந்த 8ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை வெண்ணைத்தாழி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சீதா,லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
வெண்ணைத்தாழி பல்லக்கில் நவநீத சேவையாக எழுந்தருளிய சந்தானராமருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. நகரின் பெரும்பாலான வீதிகளில் வெண்ணைத்தாழி பல்லக்கு வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் நாராயணன் வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் தமிழ்மணி, செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
வரும் 19-ம் தேதியுடன் ஶ்ரீராமநவமி விழா நிறைவு பெறுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...