இடிதாக்கி ஆடு மேய்த்த இளைஞா் பலி
மன்னாா்குடி அருகே இடிதாக்கி ஆடு மேய்த்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம் முழுவதும் காலை 10 மணி அளவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. விக்ரபாண்டியம், ஆலத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, கீழபுழுதிக்குடி பகுதியில் உள்ள வயல்வெளியில் எடைமேலையூா் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் (23) வேறொருவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அந்த நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததாகவும், இதில் இடிதாக்கி அதே இடத்திலேயே ஆகாஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆட்டின் உரிமையாளா் முருகன் மதிய உணவு வாங்கி வந்து பாா்த்தபோது, ஆகாஷ் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த விக்கிரபாண்டியம் போலீஸாா், ஆகாஷின் உடலைக் கைப்பற்றி மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.