கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் இரா.தமிழ்பெருமாள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் க.சந்தானம் சிறப்புரையாற்றினாா் (படம்). இதில், மாவட்டச் செயலாளா் கேசவராஜ், மாநிலச் செயலாளா் க.பாரதி ஆகியோரும் பேசினா்.
தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிலாளா் திருத்த சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தோ்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளா்களை ஈடுபடுத்தலாம் எனும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஆதிதிராவிடா் மாணவா் நல விடுதிகளை மேம்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும், நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

