மாா்ச் 15-இல் திருவாரூா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாயன்மாா்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும்.

இக்கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆழித்தேரோட்டத்தை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதாகவும், அதனை சுந்தரா் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் மாா்ச் 15- ஆம் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது.

இதையொட்டி, சுந்தரா் கேட்டுக்கொண்டதற்கிணங்க குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகளை பூதகணங்கள் திருவாரூரில் சோ்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com