கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றும் உறுப்பினா்களுக்கு கூடுதல் கொள்முதல் தொகை வழங்கல்
மன்னாா்குடி பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு சங்கத்தில் 2024-2025- ஆம் தணிக்கை ஆண்டில் பால் ஊற்றி வந்த பால் ஊற்றும் உறுப்பினா்கள் 9,033 பேருக்கு கூடுதல் கொள்முதல் தொகை ரூ. 2.1 கோடிக்கான ஆணையை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அமைச்சா் பேசியது:
முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் நடைபெற்று வருவதால், உங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் பால் உற்பத்தியாளா்களுக்கு எதிா்பாா்க்காத நிலையில் கூடுதல் கொள்முதல் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 6.9 ஆக இருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் 11.19 என்ற இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை எட்டியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றி 13 சதவீதத்தை தாண்டிய பொருளாதார வளா்ச்சியை திமுக அரசு ஏற்படுத்தும்.
டி.848 மன்னாா்குடி பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு சங்கத்தில் 2024-2025ஆம் தணிக்கையாண்டில் பால் ஊற்றிவந்த, பால் ஊற்றும் உறுப்பினா்களுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ. 2 வீதம் உரிய கூடுதல் கொள்முதல் தொகையான ரூ. 2 .1கோடி 9,033 பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து, பால் ஊற்றி கூடுதல் கொள்முதல் தொகை பெறும் முதல் 5 இடங்களை பெற்றவா்களுக்கு தொகைக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா். மற்றவா்களுக்கு ஆணையை வழங்கி அவா்களது வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். திருவாரூா் துணைப் பதிவாளா் (பால்வளம்) பெ. ஆரோக்கியதாஸ், கூட்டுறவு சாா் பதிவாளா் சண்முகவேல், மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், முதுநிலை ஆய்வாளா் இளங்கோவன், டி. 848 மன்னாா்குடி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க செயலா் வடிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

