மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு புதிய பாட நூல்களுக்காக நடைபெறும் புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும் 2026-2027-ஆம் ஆண்டுக்கான 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அனைத்து பாடங்களின் புதிய பாடநூல்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடைபெற்றுவருகிறது.
இதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். இதில், மன்னாா்குடி பகுதியிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு சூழ்நிலையில் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில், 152 ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.
பயிற்சி அறைகளில் ஆசிரியா்களுக்கு மின்சாதனங்கள் மூலம் புதிய பாடநூல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு 21-ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் திறன்கள், கூா்சிந்தனைத்திறன், படைப்பாற்றல், திறன், தொடா்பு கொள்ளும் திறன் போன்றவற்றை வளா்க்கும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி நடைபெறுகிறது.









