நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழு தேர்வில் பாரபட்சமா?

புது தில்லி, ஏப். 10: இலங்கையில் தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடச் செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தேர்வில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:34 pm

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஏப். 10: இலங்கையில் தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடச் செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தேர்வில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய 15 பேர் கொண்ட குழு வரும் 16-ம் தேதி அந்நாட்டுக்குச் செல்ல உள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இக்குழுவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை தாங்குகிறார்.

பல்பீர் புன்ஜ் (பாஜக), பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி (பாஜக), எம். கிருஷ்ணசாமி, மாணிக்க தாகூர், என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜெ.டி. சீலம் (ஐவரும் காங்கிரஸ்), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்), சுசாரு ரஞ்சன் ஹல்தர் (திரிணமூல் காங்கிரஸ்), ரபி பெர்னார்ட் (அ.தி.மு.க.), டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதா தளம்), சைலேந்திர குமார் (சமாஜவாதி), சிதானந்த் மஹாபத்ரா (பிஜு ஜனதா தளம்) ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரே உறுப்பினரான தொல். திருமாவளவனும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை செல்லும் குழுவில் தாங்களும் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சமீபத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் குமார் பன்சலிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தில்லி பிரகதி மைதானில் "நீர் எக்ஸ்போ 2012' என்ற சர்வதேச கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மத்திய அமைச்சசர் பவன் குமார் பன்சலிடம் இது குறித்து "தினமணி' செய்தியாளர் கேட்டபோது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர் பலத்தின் அடிப்படையில்தான் இலங்கைக்குச் செல்லும் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எல்லோரையும் குழுவில் சேர்ப்பது இயலாத காரியம். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டு விட்டதா என்பது எனக்குத் தெரியாது'' என்று பன்சல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.