வெற்றிக் களிப்பில் பாஜக
ஓன்றுபட்ட தில்லி மாநகராட்சியைப் பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது அக்கட்சியினரை வெற்றிக்களிப்பில் ஆழ்த்தியுள்ள


ஓன்றுபட்ட தில்லி மாநகராட்சியைப் பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது அக்கட்சியினரை வெற்றிக்களிப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக வடக்குத் தில்லியில் இக்கட்சிக்கு மிக அதிகமான இடங்கள் கிடைத்துள்ளதை பாஜகவினர் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
மொத்தம் 272 வார்டுகளை உள்ளடக்கிய மூன்று மாநகராட்சிகளுக்கான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 55 சதவீதம் வாக்குகள் பதிவாயின. செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
32 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேட்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள், தேர்தல் ஆணையத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்ட அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனந்தமும், சோகமும்
வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவந்து கொண்டிருக்க, வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் வேட்பாளர்களும், அக்கட்சிகளின் தொண்டர்களும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வேட்பாளர்கள் கொண்டாடினர்.
அதே சமயம், வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்களும், அவர்களுக்காக உழைத்த தொண்டர்களும் சோகத்தில் மூழ்கினர்.
கிழக்குத் தில்லி மாநகராட்சிப் பகுதியான கிச்சடிப்பூர் மையத்தில், மயூர் விஹார் ஃபேஸ்-1 பகுதியில் 209வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் கௌர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். வேட்பாளருடன் அப்பகுதியில் ஊர்வலமாகச் சென்றனர். அதன் பிறகு, குருத்வாராவுக்குச் சென்று குர்மித் கெüர் வழிபட்டார்.
கல்யாண்புரி 213வது வார்டில் பாஜகவைச் சேர்ந்த ராஜ்குமார் டில்லோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அக்கட்சியினர், வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
217-வது வார்டு வினோத் நகர் வார்டு பகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரளா சௌத்ரி வெற்றி பெற்றதை, அக்கட்சியினர் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மிதந்தனர்.
சுயேச்சை வெற்றி
211வது வார்டான திரிலோக்புரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கமல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட போது, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்
வாக்கு எண்ணிக்கை நிலவரம் வந்துகொண்டிருந்த போதே, பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தவாறு இருந்தனர்.
மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலையில் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து, பண்டிட் பந்த் மார்கில் உள்ள தில்லிப் பிரதேச பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.
அசோகா சாலையில் அக்கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் நிதின் கட்கரி, தொண்டர்களுடன் சேர்ந்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடினார்.
அதே சமயம், தீனதயாள் உபாத்யாய மார்கில் தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
யாருக்கு வீழ்ச்சி...?
இந்தத் தேர்தலில் கிழக்கு தில்லி, வடக்குத் தில்லி மாநகராட்சிகளில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது. தெற்கு தில்லியில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாகவும் வந்துள்ளது. தில்லி சட்டப் பேரவைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக கருதுகிறது.
தற்போதைய தேர்தல் வெற்றி காங்கிரஸ் கட்சிக்குச் சட்டப் பேரவைத் தேர்தலின்போது பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக தலைவர் நிதின் கட்கரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த மாநகராட்சித் தேர்தலில் பெற்ற இடங்களைவிட இந்த முறை தங்களுக்கு அதிக இடங்களே கிடைத்துள்ளது என்றும், சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இந்த முடிவு பாதிக்காது என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...