தில்லியில் அரசு சேவைகளைப் பெறுவதில் பொது மக்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து துணைநிலை ஆளுநருக்கு அக்கறை இல்லை என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
நந்த் நகரியில் உள்ள வட கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, வீடுகளுக்கே சென்று சேவை அளிக்க தில்லி அரசு திட்டமிட்டிருக்கும் திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சிசோடியா கூறியதாவது: வீடுகளுக்கே சென்று சேவை அளிக்கும் திட்ட முன்மொழிவை தில்லி அரசு உருவாக்கியது.
அதில், யாருக்கேனும் அரசு தொடர்புடைய சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் தேவைப்பட்டால் கால் சென்டரை அழைக்க வேண்டும். கால் சென்டரில் பணிபுரியும் ஊழியர் வீட்டுக்கு வருவார். வீட்டுக்கு வந்து ஆவணங்களை சரிபார்ப்பார்.
கருவிழி, கைரேகை உள்ளிட்ட அடையாளங்களை பெற்றுச் செல்வார். பின்னர் தேவைப்படும் சான்றிதழ் வீட்டுக்கே சென்று வழங்கப்படும்.
இதையே "வீடுகளுக்கே சென்று சேவை' என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த முன்மொழிவை துணைநிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அரசுப் பணியாளர்கள் சேவைகள் தொடர்பாக குடியிருப்புகளுக்கும் வீடுகளுக்கும் சென்று வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், காற்று மாசு அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
ஊழல் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் நடத்திய ஆய்வின் போது அரசின் சேவைகளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் 3 அல்லது 4 முறை இந்த அலுவலகத்துக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
அவர்களில் படித்தவர்களும், பாமரர்கள், முதியவர்கள் உள்ளனர். சிலர் வேலைக்குச் செல்பவர்களாகவும் உள்ளனர். இதனால், சேவையை பெறுவதற்காக விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது.
இதுபோன்ற சிரமங்கள் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு அக்கறையில்லை.
மாறாக அரசு அலுவலகங்களுக்கு வெளியே அமர்ந்திருக்கும் இடைத்தரகர்கள் குறித்த கவலை மட்டுமே அவருக்கு உள்ளது. அரசு சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நீண்ட வரிசையில் துணைநிலை ஆளுநர் ஒரு நாள் நின்று பார்த்தால்தான் பொதுமக்களின் சிரமம் புரியும்.
இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளும் இடைத்தரகர்களுக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்து வருகின்றன. லஞ்சம் இல்லாமல் ஒரு சான்றிதழ் கூட பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்படுகிறது. இடைத்தரகர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்று கேள்வி எழுப்பினார் சிசோடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.