மோதிப்பாக்கில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியின் ஆண்டு விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சாகேத் மேக்ஸ் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கணேஷ் கே. மணி தலைமை வகித்துப் பேசினார். பள்ளி மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் 2016- 17 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. "மண் வாசனை' என்ற மையக் கருத்தை உள்ளடக்கி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியையொட்டி, கலை, கலாசாரம் மற்றும் அக்காலத்திலிருந்து தற்போது வரை உள்ள கல்வி முறை ஆகியவற்றை விளக்கும் வகையில், நடனம், நாடகம், நாட்டிய நாடகம் ஆகியவை இடம் பெற்றன.
விழாவில் பள்ளியின் முதல்வர் ஹரி கிருஷ்ணன் ஆண்டறிக்கையை வாசித்தார். தலைவர் சூரிய நாராயணன், டிடிஇஏ செயலாளர் ஆர். ராஜு , மோதிபாக் பள்ளியின் இணைச் செயலர் தங்கராஜன், முன்னாள் மாணவர் ஹரிஹரன், பிற தமிழ்ப் பள்ளி இணைச் செயலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், டிடிஇஏ பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பிற பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.