ஓடும் பேருந்தில் தில்லிப் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞர் மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லி பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவி சம்பவத்தன்று வசந்த் வில்லேஜில் இருந்து ஐஐடி கேட் பகுதிக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது இருக்கை அருகே அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய இளைஞர் திடீரென அருவருக்கத்தக்க வகையில் தனக்குத்தானே பாலியல் செய்கையில் ஈடுபட்டார். தவிர, அந்த மாணவியின் இடுப்பைத் தொட்டு சில்மிஷமும் செய்தார்.
இந்த செய்கைக்கு சம்பந்தப்பட்ட மாணவி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும், அவர் தனது ஆபாச செய்கையைத் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாணவி வசந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட நபரின் செய்கையை விடியோவில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவி சமூக ஊடகத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.