மோகன் பாகவத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இந்திய ராணுவம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும்
Updated on
1 min read

இந்திய ராணுவம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும் தில்லி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராய்சினா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் விகாஸ் சிக்ரா, தேசியச் செயலாளர் சீதாராம் லாம்பா ஆகியோர் பேசுகையில், "ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் மீது சனிக்கிழமை நடைபெற்ற பயங்கவாதிகளின் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
 முசாபர்நகரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, "இந்திய ராணுவம் பயிற்சி பெறவும், தயார் ஆவதற்கும் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் ஆர்எஸ்எஸ் நினைத்தால் 3 நாள்களுக்குள் எங்கள் தொண்டர்களை ராணுவத்துக்கு தயார் செய்து அனுப்ப முடியும்' எனக் கூறியுள்ளார். ராணுவத்தை விட மேம்பட்டவர்கள் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. 
மோகன் பாகவத்தின் இதுபோன்ற பேச்சு, பாஜக அரசு தலைமையிலான ராணுவத்தின் மீது நம்பிக்கையை ஆர்எஸ்எஸ் இழந்திருப்பதையும், ராணுவத்துக்கு இணையான படையை உருவாக்குவதற்கு முயற்சிப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வெறுப்பூட்டும் வகையில் பேசியதற்கு மோகன் பாகவத் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால், இந்த போராட்டத்தை நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸார் நடத்துவார்கள்' என்றனர். 
ராய்சினா சாலையிலிருந்து ஆர்எஸ்எஸ் அலுவலகம் அமைந்துள்ள ஜண்டேவாலானுக்கு செல்ல முற்பட்ட இளைஞர் காங்கிரஸாரை தில்லி காவல்துறையினர் தடுத்து காவல் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com