தில்லி தலைமைச் செயலகத்தில் பணியைத் தொடர்ந்தார் அன்ஷு பிரகாஷ்: அமைச்சர்களின் கூட்டம் புறக்கணிப்பு

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்னையால், தில்லி தலைமைச் செயலகத்தில்
Updated on
2 min read

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்னையால், தில்லி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அசாதாரண சூழல் நிலவிய நிலையில், புதன்கிழமை அதிகாரிகள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். 
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷும் தனது பணிகளை மேற்கொண்டார். ஆனால் ஆம் ஆத்மி அமைச்சர்களுடனான கூட்டங்களை தில்லி அரசு அதிகாரிகள் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்கும்வரை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுடனான கூட்டங்கள் புறக்கணிக்கப்படும் என்று தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தில்லி அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவர்கள் பணிகளை மேற்கொள்ளவில்லை.
இதனால் தில்லி தலைமைச் செயலகம் புதன்கிழமை பரபரப்பாக காணப்பட்டது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் உசேன் ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை காலை வந்திருந்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கெலாட் மாலை தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். 
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடிகர் கமல்ஹாசன் தொடங்கும் புதிய கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு சென்றுவிட்டார். அதேபோல் சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தில்லியில் இல்லை. சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம் புதன்கிழமை தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை.
இந்நிலையில், தில்லி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கேள்விகள், கோட்பாடுகள் குழு கூட்டத்தில் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராக்கி பித்லான், சௌரப் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்தக் குழுவுக்கு அன்ஷு பிரகாஷ் தலைமை தாங்குவார். இதனால் அவரது இருக்கை மட்டும் காலியாக இருந்தது.
தில்லி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் புதன்கிழமை மாலை 3 மணி வரைக்கும் இருந்து தனது அரசு அலுவல்களை மேற்கொண்டார். பின்னர் வழக்கம்போல் பிரதமர் அலுவலக பணிகளைக் கவனிக்க சென்றுவிட்டார்.

குடியரசுத் தலைவரிடம் முறையிட
தில்லி அரசு உயரதிகாரிகள் திட்டம்
தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு தில்லி அரசு அதிகாரிகள் புதன்கிழமை கடிதம் கொடுத்துள்ளனர். 
இது தொடர்பாக தில்லி ஐஏஎஸ் சங்கத்தின் செயலாளர் மனீஷா சக்ஷேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ், டானிக்ஸ் மற்றும் டாஸ் அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 70 அதிகாரிகள் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தவும், நிலைமையை விளக்கிக் கூறவும் அவரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். விரைவில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க உள்ளோம் என்றார் அவர். 
தில்லி அரசுப் பணிகளில் 70 ஐஏஎஸ் அதிகாரிகளும், 400 டானிக்ஸ் அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். ஐஏஎஸ், டானிக்ஸ் மற்றும் தில்லி அரசின் சார்நிலை சேவைகள் பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கியது. இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநரை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com