தலைநகர் தில்லியில் பொது விநியோக முறையை பலப்படுத்தக் கோரி தலைமைச் செயலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசுகையில், "பொது விநியோக முறையில் அளிக்கப்படும் ரேஷன் பொருள்களை நம்பித்தான் உழைக்கும் மக்கள் உள்ளனர்.
ஆனால், பொது விநியோகத் திட்டத்தை கேஜரிவால் அரசு செம்மையாகஅமல்படுத்த இயலவில்லை. இதை அமல்படுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்களைவிட தில்லி அரசு பின்தங்கியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொது விநியோக முறையை பலப்படுத்த அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டையை தில்லி அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கட்சியின் தில்லி செயலாளர் கே.எம். திவாரி பேசுகையில், "சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனு தில்லி முதல்வர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.