மாவட்ட நீதிமன்றங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு

தில்லியில் உள்ள 6 மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்து அறிய, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல் தலைமையில் 6 நீதிபதிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
Updated on
1 min read

தில்லியில் உள்ள 6 மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்து அறிய, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல் தலைமையில் 6 நீதிபதிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
இதேபோன்ற திடீர் ஆய்வுகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முதல்முறையாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடத்தினர். அப்போது, சில மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் தாமதமான வருகையால் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்காமல் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற திடீர் ஆய்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிந்தரா பட், சஞ்சீவ் கன்னா, ஜி.எஸ். சிஸ்தானி, எஸ். முரளிதர், விபின் சங்கி, ஹிமா கோலி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி கோலி உடன் சாகேத் நீதிமன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வருகை நேரம் கடைப்பிடிப்பு, நீதிமன்ற நடவடிக்கைகளின் நிலை, தூய்மை கடைப்பிடிப்பு ஆகியவற்றை அவர் நேரடியாக பார்வையிட்டார்.
இதேபோல் உயர் நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் பாட்டியாலா நீதிமன்றம், தீஸ் ஹசாரி நீதிமன்றம், கார்கர்டுமா நீதிமன்றம், ரோஹிணி நீதிமன்றம், துவாரகா நீதிமன்றம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு நடத்தினர்.
இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்ததாவது:
தில்லியின் சார்பு நீதிமன்றங்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம்தான் மேற்பார்வை ஆணையமாக உள்ளது. ஆகையால், மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை சென்றனர். கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உரிய நேரத்தில் நீதிமன்றங்களில் அமர்ந்து பணிகளைத் தொடங்குகின்றார்களா? என்பதை நேரடியாக உறுதி செய்யவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஆய்வின்போது, நீதிபதி மித்தல் ரகசியமாக ஆட்டோ ரிக்ஷாவில் பாட்டியாலா நீதிமன்றம் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். ஆனால் இந்த முறை ஆய்வில் பங்கேற்ற நீதிபதிகள் தங்கள் அலுவலக கார்களைப் பயன்படுத்தி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com