2016-17-ஆம் ஆண்டில் நாட்டில் 28,675 தனியார் கல்லூரிகளும், 8,177 அரசுக் கல்லூரிகளும் இருந்தன என இணையதள சர்வே மூலம் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சத்ய பால் சிங் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்:
"உயர் கல்வி மீதான அகில இந்திய சர்வே' (ஏஐஎஸ்எச்இ) எனும் இணையதளம் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் நடத்தப்பட்ட ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
அதன்படி, 2012-13-இல் மொத்தம் 667 பல்கலைக்கழகங்கள், 35,525 கல்லூரிகள், 122 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள், 292 மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் என உள்ளன.
2016-17-இல் இவை முறையே 864 பல்கலைக்கழகங்கள், 40,026 கல்லூரிகள், 233 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள், 345 மாநில பொது பல்கலைக்கழகங்கள் என உள்ளன.
இணையதள சர்வேயின்படி, தனியார் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதன்படி, 2012-13-இல் தனியார் கல்லூரிகள் 20,407, அரசுக் கல்லூரிகள் 6,938 என இருந்தன.
2016-17-இல் தனியார் கல்லூரிகள் 28,675, அரசுக் கல்லூரிகள் 8,177 என அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








