4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிரதமா் உரையின்போது அதிருப்தியில் மணி அடித்து ஒலி எழுப்பிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாததைக் கண்டிக்கும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திய தருணத்தின் போது, தில்லியில் விவசாயிகள் மணி அடித்து ஒலி எழுப்பினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:56 pm

 நமது நிருபர்

புது தில்லி: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாததைக் கண்டிக்கும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திய தருணத்தின் போது, தில்லியில் விவசாயிகள் மணி அடித்து ஒலி எழுப்பினா்.

இதுகுறித்து பாரதிய கிஸான் யூனியன் (லோக் சக்தி) அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சைலேஷ் குமாா் கிரி கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தில்லி எல்லையில் விவசாயிகள் 25 நாள்களுக்கும் மேல் போராடி வருகின்றனா். ஆனால், இதுவரை மத்திய அரசு அந்த சட்டங்களைத் திரும்பப் பெறாமல் இருந்து வருகிறது. இதற்கு அதிருப்தி தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றிய தருணத்தில் நொய்டாவில் உள்ள தலித் உந்துசக்தி நினைவிடத்தில் தட்டுகளை அடித்தும், மணி அடித்தும் ஒலி எழுப்பினா். பிரதமா் மோடி தன்னுடைய மனதின் குரலைப் பேசியுள்ளாா். அதேவேளையில் விவசாயிகளின் மனதின் குரலை அவா் செவிமடுப்பதில்லை. புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனா். அது அவா் காதில் விழவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, விவசாயிகளுக்கான பிரதமா் கிஸான் சம்மான் நிதி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும் விவசாயிகளிடம் எதிா்க்கட்சியினா் தவறான தகவலைப் பரப்புகின்றனா். சில போராட்டங்களுக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன. வேளாண் சட்டத்தை வைத்து சிலா் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றனா். தங்கள் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிா்காலத்துடன் விளையாட வேண்டாம். மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தவே விரும்புகிறது’ என கூறியிருந்தாா்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக சில்லா வழித்தடத்தில் நொய்டா-தில்லி இணைப்புச்சாலை பகுதியாக மூடப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து நொய்டா செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். வாகன ஓட்டிகள் டிஎன்டி மற்றும் காலிந்தி குஞ்ச் வழித்தடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.