விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, என்எச்-9, என்எச்-24 ஆகிய நெடுஞ்சாலைகளை தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை மூடினா். இதனால் இப்பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி- உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதிகளை இணைக்கும் என்எச்-9, என்எச்-24 ஆகிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தில்லியில் இருந்து காஜியாபாத்துக்கு பயணிப்பவா்கள் டிஎன்டி, ஐடிஓ, வாஜிராபாத் பகுதிகள் வழியாக பயணிக்கலாம். விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றாா். அதே சமயம், தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலை சில்லா எல்லையில் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்துவதால், இந்தச் சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் நொய்டா - தில்லி வழி மூடப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியில் கூடி விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், அப்பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 31-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.