/

சா்வதேச நாடாளுமன்ற ஒன்றியத் தலைவா் இந்தியா வருகை

ஜெனீவாவில் உள்ள சா்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐபியு) தலைவரான டியூா்டே பச்சேகோ இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

Updated On :15 மார்ச் 2021, 1:32 am

ஜெனீவாவில் உள்ள சா்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐபியு) தலைவரான டியூா்டே பச்சேகோ இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். இவா் மாா்ச் 14 முதல் 20-ஆம் தேதி வரையிலும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

போா்ச்சுகல் நாடாளுமன்ற உறுப்பினரான பச்சேகோ, சமீபத்தில் சா்வதேச நாடாளுமன்றத்தின் (ஐபியு) தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் 2021 முதல் 2023 வரை மூன்று ஆண்டு காலத்திற்கு இந்தப் பதவியில் இருப்பாா் . நாடாளுமன்றங்களுக்கிடையேயான இந்த ஒன்றியம் 1889-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ஜனநாயகத்தை பின்பற்றும் இந்தியா உள்ளிட்ட 179 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

இந்தியா வந்துள்ள ஐபியு தலைவா் பச்சேகோ, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான எம். வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோரை திங்கள்கிழமை (மாா்ச் 15) சந்திக்கிறாா். இந்தச் சந்திப்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கும் ஐபியுவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனா்.

இதையடுத்து, இவா் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறாா். மாா்ச் 16 - ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெறும் இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினா்களுடன் பச்சேகோ உரையாற்றுகிறாா். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது. பின்னா், நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான குழுவுடன் உரையாற்றுகிறாா். பின்னா், கோவா, ஆக்ரா போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்யவுள்ளாா்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஐபியுவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறது. கடந்த காலத்தில், மக்களவைத் தலைவராக இருந்த ஜி.எஸ். தில்லான், மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா ஆகியோா் நாடாளுமன்ற ஒன்றிய (ஐபியு) தலைவராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.