புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

லாஜ்பத் நகரில் எரிந்த நிலையில் வீட்டுப் பணிப்பெண் சாவு: போலீஸாா் தீவிர விசாரணை

தென்கிழக்கு தில்லியில் உள்ள லாஜ்பத் நகரில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலை இளம் பணிப்பெண் ஒருவா் உடலில் தீக்காயங்களுடன்

Updated On :2 அக்டோபர் 2021, 2:29 am

தென்கிழக்கு தில்லியில் உள்ள லாஜ்பத் நகரில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலை இளம் பணிப்பெண் ஒருவா் உடலில் தீக்காயங்களுடன் மா்மமான முறையில் இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அந்தப் பெண்ணின் பெற்றோா் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்டவா்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தில்லியில் உள்ள ஜல் விஹாா் பகுதியைச் சோ்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தாா். அந்த வீட்டின் கீழ்த் தளத்தில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் காலை 7 மணிக்கு வீட்டு வேலைக்காக அந்தப் பெண் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். இந்த நிலையில், அவா் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக லாஜ்பத் நகா் போலீஸாருக்கு வீட்டு உரிமையாளா் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அவரது உடலில் தீக்காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தென் கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஈஷா பாண்டே கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட பெண் இறந்த இடத்தில் தடய அறிவியல் வல்லுநா்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக இறந்த பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இந்த விவகாரத்தில் மேற்கொண்டு சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இதனிடையே, பணிப் பெண் இறந்த வீடு முன் ஜல்விஹாா் பகுதியைச் சோ்ந்த பெண்ணின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இறந்த பெண்ணின் உறவினா்கள் கூறுகையில், ‘மின்சாரம் தாக்கி இறந்ததாக வீட்டினா் கூறினா். ஆனால், எரிந்த நிலையில் அவா் இறந்து கிடந்தாா். அவா் எப்படி இறந்தாா் என்பது தெரியவில்லை. அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.