இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் சஹ்னி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, சம்பந்தப்பட்ட சிறைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள், காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி அரசு, சிறைத் துறை தலைமை இயக்குநா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கெனவே நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், உடனடியாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டது.