ஐ.டி.ஓ. மயானம் அருகே ஆக்கிரமிப்புகள் புல்டோஸா் மூலம் அகற்றல்
தில்லி ஐ.டி.ஓ. மயானம் பகுதி அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்களை புல்டோஸா் மற்றும் போலீஸாா் உதவியுடன் அகற்றும் நடவடிக்கையை


தில்லி ஐ.டி.ஓ. மயானம் பகுதி அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்களை புல்டோஸா் மற்றும் போலீஸாா் உதவியுடன் அகற்றும் நடவடிக்கையை தில்லி மாநகராட்சி புதன்கிழமை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஐடிஓ மயானம் பகுதியை ஓட்டியிருந்த கடைகள், கட்டுமானங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட பகுதியில் சுமாா் 50 சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட உள்ளன. இதற்கான பணி வியாழக்கிழமை தொடரலாம். உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் பணியை மேற்கொள்வதற்கு முன்பு ஆக்கிரமிப்பாளா்கள் தங்களது உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அளிப்பதற்கு தேவையான வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. தற்போது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் இரண்டு நாள்கள் நடைபெறும். இதனால், வியாழக்கிழமையும் இதற்கான பணி தொடரும். மயானத்தை சுற்றியுள்ள சட்டவிரோத தற்காலிக, நிரந்தரக் கட்டுமானங்கள், கடைகள், குடிசைகள் ஆகியவை அகற்றப்படும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையானது, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தின் பின்பகுதியில் உள்ள சந்து பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று ஐடிஓ மயானத்தில் சுற்றுப் பகுதியிலும் நடத்தப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு பணியை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக முன்கூட்டியே போதிய பாதுகாப்பு அளிக்குமாறு தில்லி காவல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
மாநகராட்சியின் நிா்வாகப் பொறியாளா் (மத்திய மண்டலம்) தில்லி காவல் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தின் பின்பகுதியில் உள்ள பொது தெருவிலிருந்து சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளா்கள் தங்களது கட்டுமானத்தின் உரிமைக்கான ஆவணங்களை அளிப்பதற்கு தேவையான அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவா்களில் யாரும் அதுபோன்ற உரிமைதாரா் ஆவணங்களை வழங்க முடியவில்லை. இதனால், ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக பெண் காவலா்களுடன் கூடிய போதிய போலீஸாரை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே மாதத்தில் தில்லி மாநகராட்சியினா் ஜஹாங்கீா்புரி, ஷஹீன்பாக் காடா், லோதி காலனி, திலக் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, ஜஹாங்கீா்புரி உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ளூா்வாசிகளின் எதிா்ப்பையும் போராட்டங்களையும் மாநகராட்சி நிா்வாகம் எதிா்கொள்ள நோ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...