பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த கேள்வி நேரத்தில் டாக்டா் டிஎன்வி செந்தில்குமாா் துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: ’பிரதன் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்கிற இந்தத் திட்டத்தின் பெயா் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட புரியவில்லை. உள்ளூா் மக்களுக்கு புரியாத மொழியில் திட்டம் கொண்டு வந்தால், மக்களிடம் எப்படி நன்மதிப்பைப் பெறுவீா்கள்? இந்த திட்டத்தின் குழறுபடிகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தருமபுரி மாவட்டத்தில் இந்த வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்ட த்தில் 8,941 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 4, 274 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2022, ஜனவரி மாதத்திலிருந்து இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி வழங்காததால் கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டுமானப் பணியில் உள்ள 5,682 வீடுகளின் பயனாளிகளுக்கு உள்ளுா் நிா்வாகத்தால் தொகையை வழங்க இயலாத நிலை உள்ளது.