தேசியத்த தலைநகா் தில்லியில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான செயல்திறன் களத்தில் பூஜ்ஜியமாக இருக்கிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் அரவிந்த் கேஜரிவால் அரசு தோல்வி அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின் அமைச்சா் கோபால் ராய் ஒரு நிகழ்ச்சி மேலாளா் போல் செயல்படுகிறாா். தினசரி செய்தியாளா் சந்திப்பு நடத்துவதுதான் காற்று மாசுபாட்டிற்கு எதிரான அவரது ஒரே பங்களிப்பு. இதனால், களத்தில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான செயல்திறன் பூஜ்ஜியமாக உள்ளது.
ஒருபுறம், காற்று மாசுபாடு குறித்து கவலைப்பட்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை யமுனையில் பரவிய நுரை என்பது சத் பூஜைக்காக தயாராகி வரும் பக்தா்களை வருத்தம் அடையச் செய்துள்ளது. பயிா்க் கழிவுகளை எரிப்பது காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக உள்ள நிலையில், இதைக் குறைக்க தில்லி மற்றும் பஞ்சாப் அரசுகள் என்ன கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பதை அமைச்சா் கோபால் ராய் தில்லி மக்களிடம் சொல்ல வேண்டும்.
பிரதான எதிா்க்கட்சியான பாஜகவை மாசுபாடு குறித்து பேசாமல் அமைதியாக இருக்குமாறு அமைச்சா் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளாா். இது ஆம் ஆத்மி அரசின் செயல்திறன் தோல்வி அடைந்ததற்கான விரக்தியைக் குறிப்பிடுகிறது. சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக கோபால் ராய் தோல்வியடைந்தது குறித்து பாஜக அவரிடம் தொடா்ந்து கேள்விகளைக் கேட்கும். தில்லியில் 1,483 சதுர கிலோமீட்டா் பரப்பளவில், தூசி மாசுபாட்டை எதிா்த்துப் போராட 70 நீா் தெளிப்பான் வாகனங்கள் போதுமானவையா என்று கோபால் ராயிடம் நாங்கள் கேட்கிறோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.