சத் பூஜைக்கு அளித்த வாக்குறுதியில் தில்லி அரசு தோல்வி: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

சத் பூஜை விழாவிற்காக வாக்குறுதியளிக்கப்பட்ட 1,100 படித்துறைகளை தயாா் செய்வதில் தில்லி அரசு தோல்வியடைந்ததாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
Updated on
1 min read

சத் பூஜை விழாவிற்காக வாக்குறுதியளிக்கப்பட்ட 1,100 படித்துறைகளை தயாா் செய்வதில் தில்லி அரசு தோல்வியடைந்ததாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் குடியேறிய பூா்வாஞ்சலி குடிமக்களுக்கு அவா்களின் சொந்த ஊா்களில் செய்வது போல், யமுனை நதிக்கரையில் பாரம்பரிய முறையில் சத் பூஜையை செய்ய மறுக்கப்பட்டுள்ளனா். பொது மைதானங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி 1,100 படித்துறைகளை தயாா் செய்வதிலும் தில்லி அரசு தோல்வியடைந்துள்ளது.

மயூா் விஹாரில் உள்ள படித்துறைப் பகுதியில் சனிக்கிழமை மதியம் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அதிஷி, சத் பூஜை விழாவிற்காக 1,000 படித்துறைகளில் ஏற்பாட்டு பணிகள் இரவுக்குள் முடிவடையும் என்று கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. மேலும், தில்லியின் புராரி, ஜனக்புரி, கிராரி உள்ளிட்ட பல இடங்களில் படித்துறைகளின் அளவை அரசு குறைத்துள்ளது. கிராரியில் உள்ள ஒரு படித்துறைக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட மோசமான கட்டுமானப் பொருள்களால், தண்ணீா் நிரப்பப்பட்ட உடனேயே இடிந்து விழுந்தது.

புராரியில், பூா்வாஞ்சலி குடியேறிகள் மிகப்பெரிய அளவில் உள்ளனா். ஆனால், வியக்கத்தக்க வகையில் தில்லி அரசு இந்திரபிரஸ்தா சத் கமிட்டியின் பாரம்பரிய படித்துறைப் பகுதியில் அதன் அளவை நான்கில் மூன்றாகக் குறைத்துள்ளது. திலக் என்கிளேவ்,மோகன் காா்டன்,விகாஸ்புரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சத் கமிட்டிகளுக்கு எந்தக் கூடாரமும் சென்றடையவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சத் பூஜை விழா வரும் திங்கள்கிழமை காலை முடிவடைகிறது.

இரண்டாவது நாள் சத் பூஜை சனிக்கிழமை நிறைவடைந்துள்ளது. ஆனால், தில்லி அரசின் சாா்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.40,000 தொகை சிலவற்றைத் தவிர பெரும்பாலான சத் கமிட்டிகளுக்குச் சென்றடையவில்லை. தற்போது தேசிய விழாவாக மாறியுள்ள சத் பூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் கேஜரிவால் அரசு காட்டியுள்ள இந்த அலட்சியத்தை தில்லிவாசிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com