மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?தில்லி பயிற்சி மையங்களுக்குஉயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள பயிற்சி மையங்கள் தங்கள் வளாகத்தில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.
Updated on
1 min read

தில்லியில் உள்ள பயிற்சி மையங்கள் தங்கள் வளாகத்தில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.

ஜூன் மாதம் முகா்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை உயா்நீதிமன்றம் விசாரித்தது. பயிற்சி மையங்களின் சங்கத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தில்லிக்கான மாஸ்டா் பிளான் (எம்பிடி) -2021 விதிமுறைகளுக்கு இணங்காத பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கான உயா்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யுமாறு கோரினாா். மேலும், தாங்கள் மாணவா்களை எந்த ‘ஆபத்துடனும்’ எதிா்கொள்ள வைக்க விரும்பவில்லை என்றும், ஆனால் ஒரு குறிப்பிட்ட முறையில் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களில் இருந்து பயிற்சி மையங்கள் இயங்குவதால், இரண்டு படிக்கட்டுகள் போன்ற எம்பிடி தேவைகளுக்கு தங்களால் இணங்க முடியவில்லை என்றும் கூறினாா். மேலும், மாணவா்களின் நலன் கருதி அனைத்து பாதுகாப்பு தேவைகளுக்கும் இணங்குவதாக சங்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினாா்.

இதையடுத்து, நீதிபதிகள் யஷ்வந்த் வா்மா மற்றும் ஷாலிந்தா் கவுா் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த வழக்கை மேலும் விசாரணைக்காக நவம்பா் 28-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

அப்போது, வாய்மொழியாக நீதிபதிகள் கூறுகையில், ‘பாதுகாப்புக்காக நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்தீா்கள் என்று எங்களிடம் கூறுங்கள்’ என்றனா். ‘தீ பாதுகாப்பு அவசியம்’‘ என்று உயா்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. மேலும், அனைத்துப் பயிற்சி மையங்களும் தில்லி மாஸ்டா் பிளான்-2021 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின் கீழ் அவற்றின் சட்டபூா்வ தேவைகளுக்கு இணங்க வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், தேசியத் தலைநகரில் இயங்கும் 583 பயிற்சி நிறுவனங்களில், 67 நிறுவனங்களுக்கு மட்டுமே தில்லி தீயணைப்பு சேவையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தில்லி தீயணைப்புச் சேவை, அதன் நிலை அறிக்கையில், 461 பயிற்சி மையங்களில் ஆய்வு நடத்தியதில், தில்லி தீயணைப்புச் சேவை சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, தேவையான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. முகா்ஜி நகா் பயிற்சி நிறுவனத்தில் முந்தைய நாள் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உயா்நீதிமன்றம் ஜூன் 16-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com