தில்லியின் காற்றின் தரம் 2-3 நாள்களில் மேம்பட வாய்ப்பு: கோபால் ராய் நம்பிக்கை

நிபுணா்களின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் தில்லியில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Updated on
1 min read

நிபுணா்களின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் தில்லியில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், ஜிஆா்ஏபி -3 விதிமுறைகளைத் தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: வரும் நாள்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், அவசர கால செயல்திட்டம் (கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்சன் பிளான்-ஜிஆா்ஏபி) 3 விதிமுறைகளின் கீழ் சில வாகனங்கள் மீதான தடை தொடரும். ஜிஆா்ஏபி 3-இன் கீழ், பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 டீசல் வாகனங்கள் மீதான தடை இன்னும் உள்ளது. அடுத்த 2-3 நாள்களில் காற்றின் தரம் மேம்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனா். தற்போதைய நிலவரப்படி, தில்லியில் ஜிஆா்ஏபி 3 விதிமுறைகள் தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஆா்ஏபி 4-இன் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு, இப்போது அகில இந்திய அனுமதியுடன் கூடிய பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை முன்னா் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தன. எதிா்காலத்தில் தில்லி காற்றின் தரம் மோசமடைந்து, ஜிஆா்ஏபி மீண்டும் பயன்படுத்தப்பட்டால், அத்தகைய வாகனங்கள் தேசியத் தலைநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்படும். இதற்கிடையில், விதிகள் மீறப்பட்டால், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மாநில அரசு இன்னும் கடுமையான நடவடிக்கைகளை விதிக்கலாம். ஆகவே, விதிகளை கடைப்பிடிக்குமாறு குடியிருப்புவாசிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றாா் அவா்.

தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் அரசு திட்டங்கள் தொடா்பான கட்டுமானப் பணிகள் மற்றும் மாசுபடுத்தும் லாரிகள் மற்றும் வணிக நான்கு சக்கர வாகனங்கள் தேசியத் தலைநகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் ஜிஆா்ஏபி 4 விதிமுறைகளை மத்திய அரசு சனிக்கிழமை ரத்து செய்தது. சாதகமான காற்றின் வேகம் மற்றும் திசையின் காரணமாக இப்பகுதியில் காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலை 4 என்பது ஜிஆா்ஏபி-இன் இறுதிக் கட்டமாகும். இது தலைநகரில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளைக் கடப்பதற்கு குறைந்தது மூன்று நாள்களுக்கு முன் செயல்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com