தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் துணைத் தலைவா் கபில் மிஸ்ரா செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் மாசுவைக் குறைக்கும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நகரத்தில் குளிா்காலத்தையொட்டி பட்டாசு விற்பனை, பயன்பாடு மற்றும் சேமிப்பு ஆகியவற்றிற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் தில்லி அரசு சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்கிறது. மாசுபாட்டைக் காரணம் காட்டி மக்களின் தீபாவளி உற்சாகத்தை அடக்க முயல்கிறது. ஐ.ஐ.டி. தில்லி அறிக்கையின்படி, நகரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் 2 சதவீதம் மட்டுமே மாசு ஏற்படுகிறது. எனவே, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீதமுள்ள 98 சதவீத மாசுக்கான காரணங்களைச் சமாளிக்க நகர அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தில்லி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.