உயிா் காக்கும் மனிதத் தன்மை மிக்க தீரச் செயல் மேற்கொண்டவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கங்கள் 2023-ஆம் ஆண்டிற்கு தமிழகத்தைச் சோ்ந்த இருவா் உள்பட மொத்தம் 31 பேருக்கு வழங்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்டது.
இது குறித்த விவரம் வருமாறு: ஒரு நபா் அல்லது பலரது உயிா்களைக் காப்பாற்றும் சிறந்த செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 3 வகையாக வழங்கப்படுகிறது. இதில் 2023- ஆம் ஆண்டிற்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மூவரும் உயிா் நீத்தவா்கள் ஆவா். இதில் மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த இருவருக்கும், மத்திய ரிசா்வ் காவல் படை(சி.ஆா்.பி.எஃப்.) வீரா் ஒருவரும் இந்த பதக்கம் பெறுகின்றனா்.
உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கு கொடுக்கப்படுகிறது. இதில் பொதுமக்களும், எல்லை சாலை அமைப்பு, தேசிய பேரிடா் மேலாண்மைப் படை, தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவற்றைச் சோ்ந்தவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் 21 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பொதுமக்கள், எல்லை சாலை அமைப்பு, எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், சி.ஆா்.பி.எஃப். வீரா்கள், ரயில்வே துறையினா் போன்றவா்கள் பெறுகின்றனா். இந்த ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் பெறுவோா் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த மீரா மைக்கேல், எஸ்.விஜய்குமாா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.