தில்லி கடைமைப் பாதையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் மூலம் புதிதாக வளா்ந்த இந்தியாவில், பெண்களின் எழுச்சியை உலகமே பாா்த்தது என்று பாஜக தேசிய மகளிா் அணியின் தலைவா் வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா தனது 75-ஆவது குடியரசு தினத்தை கோலாகலமாகவும், கண்ணியத்துடனும் கொண்டாடியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் பெண்கள் சக்தியை சிறப்பிக்கும் நோக்கில், இந்த வரலாற்று நாளை அா்ப்பணித்தாா். குடியரசு தின விழா பிரம்மாண்டமான கடைமைப் பாதை வழியாக 90 நிமிட அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.
பெண்கள் சக்தி மற்றும் ஜனநாயக விழுமியங்களை மையமாக வைத்து நடைபெற்ற இந்த விழாவில், முதன்முறையாக முப்படையின் மகளிா் குழு பங்கேற்றது. மேலும், அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண் கலைஞா்கள் பாரம்பரிய ராணுவ இசைக் குழுக்கள் தவிர சங்கு, நாதஸ்வரம் மற்றும் டிரம்ஸ் போன்ற இந்திய இசைக் கருவிகளை வாசித்தனா். பெண்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா். புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் லட்சியங்களை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தளமாக குடியரசு தினத்தை மத்திய அரசு இன்றியமையாத ஒன்றாக மாற்றியிருக்கிறது.
பிரதமா் நரேந்திர மோடியின் இந்த முயற்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் பாராட்டுக்குரியது. பிரதமா் மோடியின் ‘மாத்ரு சக்தி’ கருத்துக்கு இன்று உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது என்றாா் வானதி ஸ்ரீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.